கவிஞர், நாடகாசிரியர் இ.முருகையன் மறைவு

28 06 2009

 

Murukaiyan(23/04 /1935 – 27/06/2009)

 

 ஈழத்தின் சிறந்த கவிஞர்களுள் ஒருவரும் நாடக ஆசிரியருமான கலாநிதி இ.முருகையன், இயற்கை எய்தினார். அவரது பிரிவு ஈழத் தமிழ் அரங்கில் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு.

கலாநிதி இ.முருகையன் நாடறிந்த மூத்த கவிஞர், நாடக எழுத்துருப் படைப்பாளி.

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவபிரகாச வித்தியாசாலை, சாவகச்சேரி இந்துக் கல்லூரிகளில் கற்றார்.

இரண்டாம் நிலைக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) பட்டப்படிப்பையும் மேற்கொண்டவர். 1956ம் ஆண்டு Bsc பட்டத்தைப் பெற்றுக் கொண்ட இவர், கடந்த காலங்களில் ஆசிரியராக, அரச கரும மொழித்திணைக்கழத்தில் மொழி பெயர்ப்பாளராக, ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராக, கல்வித் திணைக்களத்தின் கல்விப்பணிப்பாளராக, பல்கலைக்கழகத்தில் உதவிப்பதிவாளராக கடமையாற்றியுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. ஈழத்துப் பிரபலமான நாடகக்காரர் சிவானந்தனின் சகோதரர் இவர்.

1965ல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பிள்ளைகள்.

கவிஞர் முருகையன் கவிஞராக மட்டுமன்றி நாடக ஆசிரியராகவும் தமிழறிஞராகவும் திறனாய்வாளராகவும் சீரிய முற்போக்குச் சிந்தனையாளராகவும் அறியப்பட்டவர். அரசகரும மொழித் திணைக்களத்தில் பணியாற்றிய காலத்தில் தமிழ்க் கலைச் சொல்லாக்கத்திற்கு அவர் ஆற்றிய சேவை பெரும் கவனத்திற்குரியது.

அவரது கவிதைகள் போன்று மொழி, சமுகம், அரசியல் ஆகிய துறைகளில் அவரது கட்டுரைகளும் மிகுந்த தெளிவும் ஆழமும் கொண்டவை. சமூகப் பயனுடையவை.

அவரது மறைவையொட்டி அஞ்சலிகளையும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் செய்திறன் அரங்க இயக்கமும் கூத்தரங்கமும் தெரிவித்துக் கொள்கின்றன.

“அவரது பிரிவு தமிழ் இலக்கிய உலகிற்கும் சமூக விடுதலைச் சிந்தனையாளர்கட்கும் தமிழ் அறிவுத் துறைக்கும் ஒரு பேரிழப்பாகும்” என்று தேசிய கலை இலக்கியப் பேரவை தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.

கவிஞர் முருகையன் கூத்தரங்கம் இதழுக்கு வழங்கிய செவ்வியை இங்கு காணலாம்.





ஒகஸ்டோ போவாலுக்கு அஞ்சலி

11 06 2009

 

Mangai and Thevananth

பிரயோக அரங்கின் தந்தை என அழைக்கப்படும் ஒகஸ்டோ போவாலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 15.05.2009 சென்னையில் நடைபெற்றது. ‘மாற்று உரையாடல் வெளி’ அமைப்பு இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இலங்கையின் முன்னணி நாடகக் கலைஞரும் செயல் திறன் அரங்க இயக்க நிறைவேற்று இயக்குனருமான தே.வோனந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சென்னையைச் சேர்ந்த பெண் நாடக இயக்குனார் அ.மங்கை அஞ்சலி உரையாற்றினார்.

சென்னை, மவுண்ட் ரோட்டில் உள்ள ‘புக் பாயின்ட்’ புத்தகசாலையில் மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெற்ற நிகழ்வில் சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் அரசு, பிரபல நாடகக் கலைஞர் பிரளயன், வெளி ரங்கராஜன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

ஒகஸ்டோ போவாலின் வாழ்க்கை, அவரது சித்தாந்தங்கள், பிரயோக அரங்கத்தை அவர் கையாண்ட விதம் என்பன குறித்து அ.மங்கை தனது உரையில் குறிப்பிட்டார். ஒகஸ்டோ போவாலின் பிரயோக அரங்க முறை யாழ்ப்பாணத்தில் எவ்வாறு பயன்பாட்டில் உள்ளது என்பது பற்றி தேவானந்த் தலைமை உரையில் விவரித்தார்.

பிரேசில் நாட்டின் ரியோ-டி-ஜெனிரோ நகரில் பிறந்து வளர்ந்தவர் ஒகஸ்டோ போவால். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கல்வி முடித்ததும் பிரேசில் நாட்டின் அரேனா தியேட்டரில் பணியாற்றத் திரும்பினார். 1960களில் பார்வையாள – நடிகர் (Spect-actor) என்ற கருத்தாக்கத்தை முன்னெடுத்தார்.

1971 – 1986 காலகட்டத்தில் நாடு கடத்தப்பட்டார். 1986ல் பிரேசில் திரும்பியதும் முழு மூச்சாக அரசியலில் ஈடுபட்டார். 1992ல் ரியோ நகரத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். 1996ல் முதலும் கடைசியுமாக பாலோ பிரையரும் போவாலும் ஒன்றாக ஒடுக்கப்பட்டோர் கல்வி முறையியல் மாநாட்டில் கலந்துகொண்டனர். பல்வேறு நாடுகளில் ஒடுக்கப்பட்டோர் அரங்கம் தொடர்பான பயிற்சிகளை போவால் நடத்தினார்.

“தன்னைத் தானே இயந்திரமயமாக்கிக் கொள்ளும் உலகில் கலைக்குரிய இடம் இல்லை. கலை, தனித்தன்மையற்ற பண்டமாகிறது. சந்தைதான் நமது இரசனையை, விளைவைச் செதுக்குகிறது.

“நான் பிரபல பாடகரின் குரலில் பாடவேண்டும். வேறு நடனக் கலைஞர்களின் கால்களால் ஆடவேண்டும். உலகைப் பிறர் கண்களால் காணவேண்டும். எனக்குரியதாக இல்லாத கண்ணீரைச் சொரிய வேண்டும். என் முகத்தில் சுத்தியல் கொண்டு செதுக்கப்பட்ட புன்னகையைப் புரியவேண்டும்.” – ஒகஸ்டோ போவால்

Thevananth

Meena Suvaminathan

  Arasu and Piralayan





இசை நாடகப் பயிற்சி

24 05 2009

செயல் திறன் அரங்க இயக்கம் இசை நாடகப் பயிற்சி ஒன்றினை, யாழ். பல்கலைக்கழக கல்வியியல்துறை மூத்த விரிவுரையாளர் கலாமணியினை வளாளராக் கொண்டு நடத்தி வருகின்றது. இசைநாடகப் பயிற்சியில் 21 பேர் இணைந்து பயிற்சி பெற்றனர். தற்சமயம் 15 பேர் தொடர்;ச்சியாக பயிற்சி பெற்று வருகின்றனர்.

அனேகமானவர்கள் இசைநாடகம் பற்றித் தெரியாதவர்களாக ஆனால் இசை நாடகத்தில் ஆர்வம் உள்ளவர்களாக உள்ளார்கள்.

இசை நாடகம் என்றால் என்ன, அதனை எவ்வாறு இலகுவாக பயில முடியும், அதனால் எமக்கு என்ன பயன், இசை நாடகத்திற்கு பாடல் தான் முக்கியம், பாடலை எவ்வாறு என்ன முறையில் பாடவேண்டும் என்ற அடிப்படையில் இருந்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. எல்லாருமே இலகுவில் விளங்கிக் கொள்ளக்கூடியவகையில் பயிற்சி நெறி அமைந்துள்ளது.





நாடக தயாரிப்பு எழுத்துரு பயிற்சி

24 05 2009

நாடகமும் அரங்கியலும் செயல்முறைப் பயிற்சியைப் பெறுவதற்கோ அல்லது அனுபவத்தைப் பெறுவதற்கோ  இத் துறைசார்ந்த மாணவர்களிற்கு களம் கிடைக்கவில்லை என்ற ஒரு அபிப்பிராயம் உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டும் செயல் திறன் அரங்க இயக்கம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்களின் நன்மை கருதி ‘நாடக எழுத்துருத் தயாரிப்புக் கற்கை நெறி’ ஒன்றை கடந்த பெப்ரவரி 15ம் திகதி ஆரம்பித்தது. மூன்று மாதகாலத்தினைப் பயிற்சிப் பிரிவாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி நெறி வைகாசி 17ம் திகதி முடிவடைந்துள்ளது.

இக் கற்கை நெறியில் நாடக எழுத்துரு எழுதுதல், நெறியாள்கை, காட்சியமைப்பு, விமர்சனம் போன்ற விடயப்பரப்புக்கள் பிரதானமாக இடம்பெற்றது. 21 பேர் இப் பயிற்சி நெறியில் பங்குபற்றி 16 பேர் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்து சான்றிதழ் பெற்றுள்ளனர்.

வளவாளராக குழந்தை ம.சண்முகலிங்கம் ஆசிரியர் கலந்து கொண்டு பயிற்சி நெறியினை வழங்கினார். குறிப்பிட்ட நேரத்தை வரையறுத்து குறிப்பிட்ட தலைப்பில் நாடகம் எழுதுதல் என்பது பலரதும் விருப்பத்தைப் பெற்றிருந்தது.

தயாரிப்பு அனுபவத்திற்காக ‘யாரொடு நோகேன்’ மற்றும் ‘பஞ்சவர்ண நரியார்’ ஆகிய நாடகங்கள் பழக்கப்பட்டன.

கற்றல் கற்பித்தலில் தாம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் குறித்து மாணவர்கள் வளவாளருடன் கலந்துரையாடினர். இரண்டாவது பிரிவினருக்கான பயிற்சி நெறி ஜூன் 14ம் திகதி ஆரம்பமாக உள்ளது. பயிற்சி நெறிக்கு இதுவரை 11 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை இணைப்பதற்கான இடங்கள் இருக்கின்றன என்று செயல்திறன் அரங்க இயக்க நிறைவேற்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.





4 ஆயிரம் மாணவர்கள் பார்த்த நாடகம்

24 05 2009

செயல் திறன் அரங்க இயக்கம் ‘கல்வியில் அரங்கு’ என்ற எண்ணக்கரு அடிப்படையில் கடந்த பல ஆண்டுகளாக கல்வித்திணைக்களத்துடன் இணைந்து கல்விப்பணிப்பாளர்களின் அனுமதியுடன் பாடசாலைச் சிறார்களுக்கு சிறுவர் நாடகங்களை மேடையேற்றி வருகின்றது.

கல்விச்சுமை அதிகரிப்பினாலும் யாழ். மாவட்டத்தில் நிலவுகின்ற சூழலின் தாக்கத்தினாலும் மன அழுத்தத்தில் இருந்து பிள்ளைகள் ஒரு மணிநேர மகிழ்வூட்டலின் உளசமூக தளர்வுநிலையினை ஆற்றுகைகள் கொடுக்கும் வகையில் குழந்தை ம.சண்முகலிங்கம் ஆசிரியரின் ‘பஞ்சவர்ண நரியார்’, ‘கண்மணிக்குட்டியர்’, ‘கூடிவிளையாடு பாப்பா’, ‘மந்திரத்தால் மழை’ போன்ற சிறுவர் நாடகங்களை மேடையேற்றி இருந்தது. தற்போது, செயல் திறன் அரங்க இயக்கத்தினால் நடத்தப்பட்ட 06 மாதகால சிறுவர் அரங்கப் பயிற்சியில் பங்குபற்றிய மாணவர்களின் செயல் முறை அனுபவத் தயாரிப்புக்காக எழுத்தப்பட்ட குழந்தை ம.சண்முகலிங்கம் ஆசிரியரின் ‘பந்தயக் குதிரையார்’ என்ற நாடகம் மேடையேற்றப்பட்டு வருகின்றது.

யாழ். இந்து மகளிர் ஆரம்பப்பாடசாலையில் 07.05.2009 அன்று முதல் மேடையேற்றம் கண்ட ‘பந்தயக் குதிரையார்’ எனும் சிறுவர் நாடகம் இதுவரை 10 பாடசாலைகளில் மேடையேறியுள்ளது. 4,300ற்கு மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ஆற்றுகையில் சிறுவர்கள் மகிழ் நிலையில் ஒன்றித்து இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. மகிழ்சிகரமான கற்றலின் தூண்டுதலையும் மாணவர்களிடத்தில் எதிர்பார்க்கக் கூடியதாக உள்ளது. ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் கதையாக உள்ளது.

இவ்வாறான மகிழ்ச்சியான கருத்துள்ள நாடகங்கள் அரங்கேற்றி மாணவர்களை மனத்தளர்வு நிலைக்கு இட்டுச்செல்ல வேண்டும். மாணவர்கள் மனதில் பதிந்தது நாடகத்தின் பாட்டுக்களும் நடனங்களும் நகைச்சுவைகள். நல்ல விழுமியங்கள், ஒற்றுமை, நட்பு, தவறை மன்னிப்பது போன்ற கருத்துக்களை நாடகங்கள் மாணவர்களுக்கு தந்துள்ளது. இவை பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களிடத்தில் இருந்து வந்த கருத்துக்கள்.








Follow

Get every new post delivered to your Inbox.